Sunday, 13 September 2015

என் கவிதை வரிகள்















வில்லூன்றிக் கந்தனவன்
வினைதீர்க்க வந்திடுவான்
சொல்லூன்றிக் கேட்கும்வரம்
நொடிப்போதில் தந்திடுவான்
பல்தோன்றாக் காலம்முதல்
பாரத்து(உ)வந்த கந்தனிவன்
வள்ளிதேவயானையரின் 
மனங்கவர்ந்த காந்தனிவன்



மின்னலை வளைத்து
கோடுகளாக வரைந்த
உன்னுருவ ஓவியத்தில்
சூரியக் குழம்பில்
தூரிகை தோய்த்து
வர்ணந்தீட்ட முயன்றேன்.
சூரியப்புட்டி சரிந்ததனால்
கீழ்வானம் எங்கும்
சிவந்தது வானம்.



தமிழ் ஆழிக் கரையினிலே 
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன் 

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார்
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான். -ஜோதி.




திரண்ட தூசில் பிறந்த அண்டம் 
அணுப் பிளவு குலவில் பிளிந்த சக்தி
இருண்ட சூனியம் ஒளிர்ந்த விந்தை 
ஆதி விண் துகள் ஆனாய் நமோ நம.

ஒன்றாய் ஒடுங்கிப் பலவாய் விரிந்து
நின்றாய் நெடும் பாற்ப் புனலாய்ப்
பெருகு பிரபஞ்ச தோற்ற முந்த
நாத விந்துகள் ஆதி நமோ நம.

பெருநாதப் பிழம்பொளியாய்ப்
பிறந்த அண்டத் துகள்நிலைபோய்
அணுத் தோன்றுங் கணத்துள்ளே
கால நிர்ணய காரணா நமோ நம.

ஜோதி : பிரபஞ்ச பிரபந்தம்.


வாழ்க்கையில் எல்லாமே
நிரந்தரம் அற்றது
நல்லது நடந்தால்
அதை மகிழ்வோடு
ஏற்றுக் கொள் ஏனென்றால்
அது எப்பவும் நீடிக்காது
அல்லது நடந்தால்
அதற்காக கவலைப்படாதே
அதுவும் என்றும் நீடிக்காது.

No comments:

Post a Comment